21/4 தாக்குதல் – ரிஷாட்டும், அவரின் சகோதரரும் கைது!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னார் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதின், கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரரான ரியாஜ் பதியூதின், கொழும்பு வௌ்ளவத்தையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் கிடைத்த சாட்சிகளின் அடிப்படையிலேயே ரிஷாட் பதியூதின் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles