உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, சுமார் ஒரு லட்சம் பக்கங்களைகொண்டதென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அச்சிடுவதற்கு சுமார் 10 மில்லியன் ரூபாய் செலவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள தகவல்களின் படி, இதனை அச்சிடுவதற்கு அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாட்சியங்கள் சுமார் 40,000 பக்கங்களை கொண்டதென தெரிவிக்கப்படுகிறது. ஆணைக்குழு அதன் விசாரணைகளை ஜனவரி 27 ஆம் திகதி முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாணர் ஷானி அபேசேகர ஆணைக்குழு முன் இறுதியாக சாட்சியமளித்தார். ஆணைக்குழுவின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், அதன் விசாரணை அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
