22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கூட்டு அரசியல் சமர் தொடரும்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எமது கூட்டு அரசியல் சமர் தொடரும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மகாநாயக்க தேரர்களை நேற்று முன்தினம் சந்தித்த கூட்டு எதிரணியினர், உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தினர். இச்சந்திப்பில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன கூறியவை வருமாறு:

“உத்தேச அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக எதிரணிகள் ஒன்றுபட்டுள்ளன. இதற்கு எதிரான எமது கூட்டு அரசியல் சமர் தொடரும். இணக்கம் எட்டப்பட்ட பொதுவான விடயங்களில் தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.

ரணில் விக்கிரமசிங்க அமைத்துக்கொடுத்த ஐ.எம்.எப் (IMF) பாதையிலேயே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது. முதலாளித்துவப் பாதையில் பயணித்துக்கொண்டு எப்படிச் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?

நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க அதிகாரம் ஆகிய இரண்டும் அரசாங்கத்தின் கைகளுக்குள் உள்ளன. தற்போது மூன்றாவது மிக முக்கியத் துறையாக விளங்கும் நீதித்துறையிலும் கையை வைக்கப் பார்க்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது” – என்றார்.

Related Articles

Latest Articles