26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியை கைப்பற்றுகிறது பாஜக

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறதுது. 19 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஆரம்பம் முதலே பாஜக நிலையான ஆதிக்கத்தை செலுத்திவந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அமோக வெற்றியை நோக்கி முன்னேறும் சூழல் டெல்லி பாஜக அலுவலகம் கொண்டாட்டங்களால் களை கட்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஆளும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடெல்லியில் போட்டியிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கேஜ்ரிவால் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங்கிடம் தோல்வியுற்றார். அதேபோல் ஆம் ஆத்மி முக்கியத் தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோரும் தோல்வியைத் தழுவினர். டெல்லி முதல்வராக பாஜக பர்வேஷ் சாஹிப் சிங்கையே தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. டெல்லி பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே பாஜக வெற்றி பெறும் என்றே கூறியிருந்தன. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வெற்றிக்கு 36 தொகுதிகள் போதுமென்ற நிலையில் மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக முன்னேறி வருகிறது. இதனால் டெல்லி பாஜக அலுவலகம் உற்சாகமாகக் காணப்படுகிறது. 26 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியை பாஜக கைப்பற்றியுள்ளது அக்கட்சியினரை கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Latest Articles