மே 28 ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பதா என்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் – என்று கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (22) தெரிவித்தார்.
குறுகிய பயணத்தடைமூலம் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது என்பதால், குறைந்தபட்சம் 14 நாட்களுக்காவது முழு நாட்டையும் முடக்குமாறு மருத்துவ சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் இராணுவத் தளபதி மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் தற்போது பயணத்தடை அமுலில் உள்ளது. 25 ஆம் திகதி அது தற்காலிகமாக தளர்த்தப்பட்டு 28 ஆம் திகதிவரை மீள நடைமுறைப்படுத்தப்படும். 25 அல்லது 26 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் செயலணி கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் நாட்டு நிலைமை மீளாய்வு செய்யப்படும்.
இதன்பிரகாரம் தேவையேற்படின் அடுத்த வாரமும் பயணத்தடையை அமுல்படுத்துவது குறித்தும் அல்லது பயணத்தடை காலத்தை மேலும் விரிவுப்படுத்துவது சம்பந்தமாகவும் பரிசீலனை செய்யப்படும்.
பயணக்கட்டுப்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாம் நிராகரிக்கவில்லை. செயலணி கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதிலும் சுகாதார தரப்பினர் பங்கேற்கின்றனர். எனவே, அக்கூட்டங்களில் தமது தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தால் அது பொருத்தமானதாக இருக்கும். நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற கூட்டத்திலும் ஜனாதிபதி இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.” – என்றார்.










