கண்டி மாவட்டம், கம்பளை கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக
பணியாற்றிய இந்திராணி கணேசன் அம்மையார், தனது 35 வருடகால
கல்விச் சேவையில் இருந்து நேற்றுடன் (2023.07.15) ஓய்வுபெற்றுள்ளார்.
ஆசிரியராக, அதிபராக, உதவிக் கல்விப் பணிப்பாளராக
அவர், மலையக கல்வி துறைக்கு ஆற்றிய சேவைகளை பலரும் நன்றி உணர்வோடு நினைவுகூர்ந்து – பாராட்டி – வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
1988 ஆம் ஆண்டில், மலையகத்தில் உள்ள பெருந்தோட்ட பாடசாலைகளில் ஒன்றான
அட்டபாகே தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையேற்றார். பிரதான
வீதியில் இருந்து பாடசாலைக்கு நெடுதூரம் நடந்து செல்ல வேண்டும். கட்டிட வசதி,
தளபாட வசதிகள் இருக்கவில்லை .கோவில் வளாகத்தில் தகரக் கொட்டில்
அமைத்து, தரையில் அமர்ந்து மாணவர்களுக்கு கல்வி அமுதூட்டினார்.
1989 ஆம் ஆண்டில் பொறுப்பாசிரியையாக கடமையேற்றார். பாடசாலைக்கு கட்டிடம் வந்தது, தளபாடங்கள் பெறப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்தனர்.
இந்நிலையில் 1999 ஒக்டோபர் மாதம் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. புசல்லாவை, மெல்போர்ட் தமிழ் வித்தியாலய அதிபராக கடமையேற்றார். அவர் அதிபராக கடமையேற்ற பின்னர் பாடசாலை சகல வழிகளிலும் அபிவிருத்தி கண்டது . பேண்ட் வாத்தியக்குழு உருவாக்கம் உட்பட புரட்சிகரமான பல மாற்றங்களை ஏற்படுத்தினார். ஒரு அதிபராக சிறந்த நிர்வாக ரீதியிலான தலைமைத்துவத்தை வழங்கினார். மாணவர் இடைவிலகலை தடுத்தார்.
2012 ஆம் ஆண்டு புசல்லாவை, இந்து ஆரம்ப பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் கம்பளை கல்வி வலயத்தில் சிறந்த ஆரம்ப பாடசாலையாக விளங்க தலைமைத்துவம் வழங்கினார். புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் (70 புள்ளிகளுக்கு மேல்) 100 வீதமாக காணப்பட்டது.
பல வருடங்கள் அதிபராக கடமையாற்றிய பின்னர் 2020 ஆம் ஆண்டு கம்பளை
வலயக் கல்விப் பணிமனையில் முறைசாரா கல்வி உதவிக்கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்பணியை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்த நிலையில், கல்வி சேவையில் இருந்து நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
கல்விமாணிப் பட்டம், பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா என்பவற்றையும் இந்திராணி அம்மையார் நிறைவு செய்துள்ளார். தனது 35 வருடகால கல்வி சேவையில் பல சிறந்த மாணவர்களை அவர் உருவாக்கியுள்ளார்.
அவரின் ஓய்வுகாலம் சிறப்பாக அமையட்டும்.




