2021 ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான நான்கு மாத காலப் பகுதியில் கொரோனாவில் உயிரிழந்தோரின் 125 சடலங்கள் நோர்வூட் மின் தகனசாலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது என்று நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் கே. குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.
அத்துடன்,, கிளங்கன் வைத்தியசாலையில் தினசரி 5 – 6 மரணங்கள் சம்பவிக்கின்ற நிலையில் அங்கு இடவசதி இல்லாமல் வைத்தியசாலை நிர்வாகம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.
நோர்வூட் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (12) இடம்பெற்ற போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,
நோர்வூட் மின் தகனசாலையில் ஒரு பிரேதத்தை எரிப்பதற்கு 10 ஆயிரம் ரூபா வரை அறவிட்டு வந்தாலும் கொரோனா மரணத்துக்கு 5 ஆயிரம் ரூபா மாத்திரமே அறவிடப்படுகின்றது. அங்கு பணிபுரிகின்ற இரண்டு பேருக்கு வேதனம் வழங்குவதற்காக இவ்வாறு குறைந்த கட்டணம் அறவிடப்படுகின்றதே தவிர, சபைக்கு வருமானம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.
கடந்த நான்கு மாதங்களில் எமது சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 125 கொரோனா சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
மேலும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கொரோனா தோற்று நோய்ப் பிரிவில் நோயாளர்கள் நிரம்பி வழிகின்றார்கள். இங்கு போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது. தினசரி 5 – 6 கொரோனா மரணங்கள் சம்பவிக்கின்றன. சடலங்களை வைத்திருக்க போதுமான பிரேத அறை வசதிகளும் இல்லை. கடந்த வாரத்தில் “கேஸ்” தட்டுப்பாடு காரணமாக பிரேதங்களை எரிக்க முடியாத நிலையும் காணப்பட்டது. இதனால் வைத்தியசாலை நிர்வாகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது.
எமது நாட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டு 1 ½ வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இன்னமும் அது தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேதனையான விடயமாகும். மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதிலும் முகக் கவசம் அணிவதிலும் அலட்சியமாக இருந்து வருகின்றார்கள்.
ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டும் பலர் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. அத்தோடு, அண்மைக் காலமாக கொரோனா உட்பட டெல்டா போன்ற மாறுபட்ட வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. இவற்றிலிருந்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டும்.
எனவே, பிரதேச சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தத்தமது வட்டாரங்களில் சுகாதாரக் குழுக்களை அமைத்து மக்களுக்கு தெளிவு படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். இதற்குத் தேவையான உதவிகளை பிரதேச சபை வழங்கும். நானும் தனிப்பட்ட முறையில் எனது பங்களிப்பை வழங்கவும் தயாராக இருக்கின்றேன் என்றார்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
