40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தான் எதிரணியில் அமர திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச தலைமையிலான மொட்டு கட்சி குழுவொன்று எதிரணிக்கு செல்லவுள்ளது எனவும், அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு வியூகம் வகுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையிலேயே இந்த அரசின் இருப்பு தங்கியுள்ளது எனவும், எனவே, மக்கள் ஆணைக்கு புறம்பாக செயற்பட தயாரில்லை எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் .
அதேவேளை, அடுத்த எந்த தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










