மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கான தொழிற்சங்க நடவடிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மலையகம் உட்பட நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 5 ஆம் திகதி பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறைகூவல் விடுத்துள்ளது.
கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் இன்று 31.01.2021 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இந்த அறைகூவலை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 25 ரூபாயால் உயர்த்தி 725 ரூபாயாகவும், மேலும் 50 ரூபாய் கொடுப்பனவுடன் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு உள்ளிட்ட உற்பத்தி திறன் அடங்கிய தொகை ஊடாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு கம்பனிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. இத்திட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் இந்த தொகையினை வழங்குவதற்காக கம்பனி தரப்பில் நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டன. அதில் கூட்டு ஒப்பந்தத்தை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் எனவும், ஒவ்வொரு தோட்டத்திலும் பறிக்கப்படும் கொழுந்தினை இரண்டு கிலோகளாக அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை நாமும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களும் நிராகரித்தோம். இந்த நிலையில் எதிர்வரும் 6ம் திகதி சம்பள நிர்ணய சபையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.
அதேநேரத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்பது அவர்களின் எண்ணப்பாடாக உள்ளது. ஆகையால் எதிர்வரும் 5ஆம் திகதி தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தொழிலற்றவர்கள் என அனைத்து தரப்பினருடனும் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்தினதும் ஒத்துழைப்புடனும், ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பு ஒன்றை நடத்தி கம்பனிகளுக்கு ஒற்றுமையை வெளிக்கொணரவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிபகிஷ்கரிப்பு அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல. மாறாக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்கு காட்டப்படும் ஒற்றுமைக்காகவே. இவ்வாறான நிலையில் சம்பள விடயம் தொடர்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் அவர்களின் நிலைபாட்டினை தெரிவித்து வரும் அதேவேளை பொது அமைப்புகளும் கருத்துகளையும் முன்வைத்து வருகின்றன.
கட்சி என்ற ரீதியில் கொள்கைகள் வேறுபாடாக இருந்தாலும் தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்தினை பெற்றுக்கொள்ள அவர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.அந்தவகையில் இந்த பணிபகிஷ்கரிப்புக்கு முழுமையான ஆதரவு கிட்டும் என நாம் பொதுவாக அழைப்பு விடுகின்றோம்.” – என்றார்.