அடையாள அட்டையைக் காண்பித்தே, 500 கிராம்
தேயிலைத் தூளைப் பெற்றுக்கொள்ளவேண்டிய துர்ப்பார்க்கிய நிலைமை தோட்டங்களில் ஏற்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது என பெருந்தோட்ட தொழிற்சங்க பிரமுகர்கள் குறிப்பிடுகின்றனர்.

37 வருடங்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்து 60 வருடங்களுக்குப் பின் ஓய்வு பெற்றுள்ள தாய், வயதாகிய காலத்தில் மாதாந்தம் வழங்கப்படும் அரை கிலோகிராம் தேயிலைத் தூளை பெறுவதற்கு ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு தோட்ட நிர்வாக உத்தியோகஸ்தரால் கோரப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பசறை, கோணக்கலை மேற்பிரிவுத் தோட்டத்தில் வசிக்கும் வயோதிய தாயொருவருக்கே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் இவ்வாறு இடம்பெறுகின்றது எனவும் தொழிற்சங்க பிரமுகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தனிமையில் வசிக்கும் பல தாய்மார்கள் அயலவர்களின் உதவியால் இதுவரை காலமும் தேயிலைத் தூளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

புதிய நடைமுறை காரணமாக குறித்தளவு அரை கிலோ தேயிலைத் தூளைப் பெற்றுக்கொள்வதற்கு இரண்டுக்கு மேற்பட்ட கிலோமீற்றர் தொலைவில் அமைந்துதுள்ள தோட்ட மடுவத்திற்கு செல்லமுடியாமல், தோட்ட உயர்வுக்கு பாடுபட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
விலை அதிகரித்துள்ள பால்மாவைப் பெற்றுக்கொள்ள தவிக்கும் பலர் தற்போது தேநீரைப் பருகுவதற்கும் முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
நிருபர் – நடராஜா மலர்வேந்தன்










