2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரையில் நாட்டில் 68 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யூ. வுட்லர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
“மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 34 பேர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள குழுக்களைச் சேர்ந்தவர்கள்.
அத்துடன், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் காயமடைந்த 39 பேரில் 30 பேர் பாதாள உலக கும்பல்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
68 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 50 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளன.
மீதமுள்ள 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 24 துப்பாக்கிதாரிகளும் 165 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.” – என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.