யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தடவைகள் கடும் மழை பெய்தமையால் , புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்கின்றது.
இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது சுமார் 90 ஆயிரம் லீற்றருக்கும் மேலான நீர் புதைகுழியில் இருந்து பவுசர் ஊடாக வெளியேற்றப்பட்டது.
மழை நீரை வெளியேற்றிய பின்னர் புதைகுழி சேற்றுத் தன்மையாக காணப்படுவதால், அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என முடிவெடுக்கப்படு அன்றைய தினத்துக்கு வழக்கு திகதியிடப்பட்டது.
புதைகுழிக்குள் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கையை யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதேவேளை, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக கடந்த ஆண்டு நீதி அமைச்சால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியுள்ளமையால், இவ்வாண்டுக்குப் புதிய பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு, நிதியை மீளப் பெற வேண்டியுள்ளமையால், புதிய பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.










