மஹியங்கனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்தார் எனக் கூறப்படும் நபரொருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை, கனுபேத்த, வேவத்த பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொழும்பில் இருந்து போதைப் பொருட்களை கொண்டுவந்து, மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக போதை ஒழிப்பு பிரிவின் தலைமை அதிகாரி பொலிஸ் சார்ஜன்ட் ஜயசேகரவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்வதற்கு முகவர் ஒருவரை நியமித்து குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து 540 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 20 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ். பலிப்பன மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.டபிள்யூ.எம்.விஜேரத்ன ஆகியோரின் பணிப்புரையின் பேரில், போதை பொருள் ஒழிப்பு பிரிவுரிவின் பொறுப்பதிகாரி போசா ஜயசேகர (66024), போகோ தாரக (81655), போகோ பிரேமரகல்லேயை (81362), பொகோ ரத்நாயக்க (1896) மற்றும் கோ மாலிகா (912) ஆகிய பொலிஸ் குழுவொன்றே குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
சந்தேகநபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்
