69 லட்சம்பேரின் அபிலாஷைகளை கைவிட்டுவிட்டு கோட்டாபய ராஜபக்ச ஓடினாலும் அந்த அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவோம் – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை விரட்டவே 69 லட்சம்பேர் அன்று வாக்களித்தனர். சஜித், அநுர ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்தபோதுதான் 69 லட்சம் பேர் எமது தரப்புக்கு வாக்களித்தனர். அந்த 69 லட்சம்பேரின் அபிலாஷைகளை கோட்டாபய ராஜபக்ச புறந்தள்ளி இருந்தாலும், அவற்றை நிறைவேற்றாமல் தப்பியோடி இருந்தாலும் அவற்றை நிறைவேற்றும் நோக்கில் நாம் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம். புதிய கூட்டணி மலரும்.
செப்டம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.” – என்றார்.










