” முடிந்தால் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரட்டும். மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலத்துடன் தக்க பதிலடி கொடுக்கப்படும்.” – என்று ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட முதலாவது அலையை ஜனாதிபதி, பிரதமர் , சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து உரியவகையில் கட்டுப்படுத்தினர். சுகாதார அமைச்சரும் தீவிரமாக செயற்பட்டார். தற்போதுகூட வைரஸ் பரவலைக்கட்டுக்குள்தான் வைத்துள்ளோம்.கொரோனாவை வைத்து சுகாதார அமைச்சரோ, அரசாங்கமோ அரசியல் செய்யவில்லை. மக்களை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலேயே ஆராயப்பட்டுவருகின்றது.
நாம் ஆன்மீகத்தையும் நம்புகின்றோம். அந்தவகையிலேயே சுகாதார கங்கையில் சுகாதார அமைச்சர் மண்குடத்தை போட்டார். அது மதம்மீதுள்ள நம்பிக்கையாகும். ஆனால் அதனைக்கூட எதிரணியினர் கொச்சைப்படுத்துகின்றனர். சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் எனக்கூறுகின்றனர்.
முடிந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருமாறு நான் சவால் விடுக்கின்றேன். அவ்வாறு பிரேரணைவந்தால் அதனை எதிர்கொண்டு தோற்கடிப்பதற்கு அரசாங்கம் தயார். மக்களும் உரிய பதிலடியைக்கொடுப்பார்கள். இந்த அரசாங்கம் ‘பெயில்’ இல்லை. எதிரணிதான் பலவீனமடைந்துள்ளது.” – என்றார்.