ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மஹியங்கனை பெரகும்புர மாவத்தையில் வைத்து முன்னாள் இராணுவ சிப்பாயொருவரை கைது செய்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
நபர் ஒருவரினால் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேக நபரிடம் இருந்து 3120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 625 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் முன்னாள் இராணுவ சிப்பாயான 31 வயதுடைய பதியதலாவ வீதி பெரகும்புர மாவத்தை மஹியங்கனை பகுதியை சேர்ந்த நபரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதுடன் நீதிமன்ற உத்தரவை பெற்று சந்தேக நபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
