34 அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் உள்ளடக்கிய ‘இயலும் ஸ்ரீலங்கா’ உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியொன்றை உருவாக்கும் நோக்கத்துடன் இதில் கையெழுத்திடவில்லை. அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கட்டியெழுப்பவே இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அன்று ஏற்பட்ட பொருளாதார சவாலை எதிர்கொள்ள முடியாது என்று தப்பி ஓடியவர்கள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப இயலும் என்பதை நம்பி, சவாலை ஏற்றுக்கொண்டவர்களே இதில் இணைந்துள்ளனர் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்ல வோர்ட்ஸ் ஏட்ஜ் ஹோட்டலில் இன்று (16) முற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக 34 அரசியல் கட்சிகள் இணைந்து “இயலும் ஸ்ரீலங்கா” உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
மகா சங்கத்தினரும் செத்பிரித் பாராயணம் செய்து ஆசிர்வாதம் வழங்கியதுடன், ஏனைய சர்வமத குருமார்களும் சமய வழிபாடுகளை மேற்கொண்டு ஆசி வழங்கினர்.
தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் நாட்டை ஆட்சி செய்வதற்குத் தகுதியானவர் என்று கூறி தனக்கு வாக்களிக்குமாறு கோருகின்ற அதேவேளை, இந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாது, மக்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அன்று நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய அனுமதித்திருந்தால் இன்று ஜனாதிபதி தேர்தலை நடத்த சந்தர்ப்பம் கிடைத்திருக்காது என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாக தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
‘இயலும் ஸ்ரீலங்கா’ உடன்படிக்கை அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்காக மாத்திரமன்றி அனைவரையும் ஒன்றிணைத்து மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
‘முடியாது’ என்று ஓடிப்போகாமல் ‘முடியும்’ என்று நிற்கக் கூடியவர்களே இந்த உடன்பாட்டில் இணைந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பு சீர்குலைந்து, நாடு மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டபோது, சில அரசியல் தலைவர்கள் ஓடிவிட்டனர்.
தலைமைத்துவத்தை மறந்தனர். நாட்டின் பிரச்சினைகளைக் கண்டு அஞ்சினர். நான் இந்த நாட்டைக் பொறுப்பேற்ற போது எனக்கு கட்சியெதுவும் இருக்கவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன்
இணைந்துகொண்டனர். அன்று முடியும் என்று முன்வந்ததால் இன்று ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது.
அன்று நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்காது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே நாட்டின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.
ஏனைய வேட்பாளர்களும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருகின்றனர். நாட்டை ஆள மிகவும் பொருத்தமானவர் தான் என்றும் கூறுகிறார்கள். ஆனால் நான் அப்படிச் சொல்லவில்லை. மக்கள் அனைவரும் தங்களினதும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் இலங்கையுடன் இணைந்து முன்னேறுவோம்.
வங்குரோத்தான மற்றும் வரிசை யுகம் காணப்பட்ட ஒரு நாட்டை தான் பொறுப்பேற்றோம். நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள், உணவு, மருந்துக்கான வரிசைகள் இருந்தன. எங்களிடம் பணம் இருக்கவில்லை. ஒரு மில்லியன் டொலர்கள் கூட பணம் இருக்கவில்லை.
இந்த வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவருவதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. அவை விருப்பத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அல்ல. குழந்தைக்கு மருந்து கொடுக்கும்போது, அறுவை சிகிச்சை செய்யும்போது பெற்றோருக்கும் குடும்பத்தினரும் இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும். அவ்வாறே நாம் நாட்டின் நலனுக்காக இந்த முடிவுகளை எடுத்தோம் .
அதன்போது, கஷ்டங்களை தாங்கிக்கொண்ட மக்களுக்கு நாம் மீண்டும் நன்றி கூறுகிறோம். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாட்டை நாம் பொறுப்பேற்று இன்று, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரித்துள்ளோம். இந்த வேலைத்திட்டத்தை நாம் மக்களுடன் இணைந்தே செயல்படுத்தினோம்.
‘அரசாங்கம் வெளியேற வேண்டும், இதற்கு தீர்வு காண முடியாது’ என்று பலர் மேடைகளில் கூச்சலிட்டனர். ஜெனிவா சென்றனர். ஆனால் சமுர்த்தி நன்மையை விட மூன்று மடங்கு மக்களுக்கு ‘அஸ்வெசும’ நிவாரணம் வழங்கினோம். நாடு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்திலேயே இப்பணிகளை நாம் செய்தோம்.
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 02 மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. ‘உறுமய’ திட்டத்தின் ஊடாக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படுகின்றது. அரச ஊழியர் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் மேலும் சம்பளம் அதிகரிக்கப்படும். வேறு எந்த அரசாங்கமும் இதுபோன்ற பணிகளை செய்ததில்லை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றை இடைநடுவில் நிறுத்துவதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
18 நாடுகள், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட 21 நிறுவனங்களுடன் நாம் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்தோம். இந்த நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அந்த இணக்கப்பாட்டின் பிரகாரம் நாம் செயற்பட வேண்டும்.
இதில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் இந்த 21 நாடுகளுடனும் நிறுவனங்களுடனும் பேச்சு நடத்த வேண்டும். இந்த பணிக்ளை முடிக்க எங்களுக்கு 02 வருடங்கள் தேவைப்பட்டது. திருத்தியமைக்க இன்னும் 02 வருடங்கள் ஆகும்.
ஆனால் இந்த சலுகைகள் இல்லாமல் இன்னும் ஒரு வருடத்திற்கு நாம் ஒரு நாடாக தொடரந்த்து பயணிக்க முடியாது. எனவே இந்த செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்து நம்மிடம் உள்ள பணத்தை இழக்க வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
எவ்வாறு நாம் முன்னேறுவது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். அபிவிருதியடைந்த நாட்டை உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை இப்படியே வடிவமைக்க வேண்டும்.
சிலர் 5 – 6 வருடங்கள் முன்னோக்கி சிந்திக்கின்றனர். ஆனால் ஜெனரல் Gen Z தலைமுறை 20 – 30 ஆண்டுகள் முன்னால் நினைக்கிறது. தங்களுக்கு எதிர்காலம்
இல்லை என்று கூறி நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர். அவர்களுக்காக இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
புதிய சக்தியாக நாங்கள் முன் வந்துள்ளோம். நாட்டின் அரசியல் கட்சிகள் வீழ்ச்சிகண்ட போது நாங்கள் ஒன்று சேர்ந்தோம். இன்னும் 5 ஆண்டுகளுக்கு அந்த வேலைத் திட்டத்தை தொடர வேண்டும். அத்துடன் புதியதொரு தலைமையும் இந்நாட்டில் உருவாகியது. அண்மைக் காலத்தில் இவ்வாறானதொரு அரசாங்கத்தை நாம் பார்த்ததில்லை.
இந்த அணியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் விரும்புகிறோம். கிராமத்தை அபிவிருத்தி செய்து இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து முன்னேறக்கூடிய இலங்கையை உருவாக்க வேண்டும்.
‘இயலும் ஸ்ரீலங்கா’ வேலைத் திட்டத்தின் மூலம் சிறந்த இலங்கையை உருவாக்க முன்னோக்கி செல்ல எம்முடன் இணையுமாறு நான் அனைவரையும் அழைக்கிறேன்.” என்றார்.

‘இயலும் ஸ்ரீலங்கா’ உடன்படிக்கையில் கையெழுத்திட்ட கட்சிகளும் பெயர் விபரங்களும் :
மக்கள் ஐக்கிய முன்னணி கட்சி – பிரதமர் தினேஷ் குணவர்தன,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – நிமல் சிறிபால டி சில்வாமற்றும் மஹிந்த அமரவீர,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ரமேஷ் பதிரன, பிரசன்ன ரணதுங்க,
ஜனாதிபதி சட்டத்தரணி எம். யு. எம் அலி சப்ரி,
புதிய கூட்டமைப்பு- சுசில் பிரேமஜயந்த,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – டக்ளஸ் தேவானந்தா,
ஐக்கிய மக்கள் கட்சி – ஹேமத்பிரிய கவிரத்ன,
பொதுமக்கள் ஐக்கிய முன்னணி – அனுர பிரியதர்ஷன யாப்பா,
ஐக்கிய தேசியக் கட்சி – வஜிர அபேவர்தன,
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி – சிவநேசதுரை சந்திரகாந்தன்,
தேசிய காங்கிரஸ் – ஏ.எல்.எம்.அதாவுல்லா,
ஐக்கிய மக்கள் சக்தி – ராஜித சேனாரத்ன, ஏ. எச். எம் பௌசி,
ஸ்ரீலங்கா மக்கள் கட்சி – அசங்க நவரத்ன,
நவ லங்கா சுதந்திரக் கட்சி – குமார வெல்கம,
ஐக்கிய மக்கள் கட்சி – அரவிந்தகுமார்
முற்போக்குத் தமிழர் கழகம் – எஸ். வியாழேந்திரன்,
சுதந்திர மக்கள் சபைக் கட்சி – உதயன கிரிந்திகொட,
தேசிய சுதந்திர முன்னணி – மொஹமட் முஸம்மில்
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் – வடிவேல் சுரேஷ்,
ஜனநாயக ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ் – வேலு குமார்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – எஸ். எம். எம் முஷர்ரப்,
ஜனநாயக தேசிய இயக்கம் – சதுர சேனாரத்ன,
தேசிய ஐக்கிய முன்னணி – அசாத் சாலி,
இலங்கை முற்போக்கு முன்னணி – சம்பிக்க லோவ்,
ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பு – எம். ராஜநாதன் பிரபாகரன்
புதிய ஜனநாயக முன்னணி – ஷியாமலா பெரேரா,
தேசப்பற்றுள்ள மக்கள் படையணி – சுகத் சேவாபத்திரன,
ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி – அன்வர் எம். முஸ்தபா,
லக்ஜன பெரமுன – சிந்தக வீரகோன்,
ஐக்கிய மக்கள் முன்னணி – சிறிமசிறி ஹப்புஆராச்சி,
தேசிய மக்கள் முன்னணி – கலாநிதி ஏ. எம் ஜயரத்ன,
நவஜனசெத பெரமுன – டபிள்யூ. எம் காமினி விஜேநாயக்க,
மவ்பிம அபிவிருத்தி முன்னணி – நிஷாம் மொஹமட்,
ஐக்கிய சமூக ஜனநாயக கட்சி – கே. பி. ஜயமினி ஜினதாச ஆகியோர் கையெழுத்திட்டனர்.










