ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சரியான தருணத்தில் நாட்டை ஏற்றுக்கொண்டு அந்த அராஜக நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று பிரதமர் தினேஷ் குணவர்தனதெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி இருந்த காலத்தை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். நாடு இருந்தது. ஆனால், நாட்டுக்கு ஒரு தலைவர் அன்று இருக்கவில்லை. தலைவர் இல்லாத நாட்டில் வன்முறைகள் அதிகரிக்கும். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சரியான தருணத்தில் நாட்டை ஏற்றுக்கொண்டு அந்த அராஜக நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஜனாதிபதிக்கு இருப்பது போல் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை செயற்படுத்திய அனுபவம் எதிர்தரப்பு வேட்பாளர்களுக்கு இல்லை. நாட்டின் தலைவர் ஒருவருக்கு சர்வதேச தொடர்புகள் கட்டாயமானது. அந்த சர்வதேச தொடர்புகள் எதிர்தரப்பு வேட்பாளர்கள் இருவருக்குமே இல்லை. அன்றும் சிலர் நாட்டின் ஆட்சியை அரஜகமான முறையில் கைபற்ற முயற்சித்தனர். அந்த முயற்சிகள் கைகூடவில்லை.
தற்போது இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கை தொடர்ந்தால் மட்டுமே நாட்டின் முன்னேற்றம் நிலைக்கும். குறைந்தபட்ச வருமானம் ஈட்டுவோருக்கும் ஜனாதிபதி நிவராணங்களை வழங்க வழி செய்திருக்கிறார்.
இன்று நாட்டில் எமிரேட்ஸ் போன்ற நிறுவனங்கள் நாளாந்தம் ஐந்து முறை விமான சேவைகளை முன்னெடுக்கிறன. அந்த அளவு இலங்கைக்கு சுற்றுலா பிரயாணிகள் வந்து குவிகின்றனர். எனவே, நாட்டை மீட்ட தலைவருக்கு வாக்களிப்பதா? மக்களை கஷ்டத்தில் விட்டு தம்மை காப்பாறிக்கொண்ட தலைவர்களுக்கு வாக்களிப்பதா?என்பதை மக்கள் தீ்ர்மானிக்க வேண்டும்.” என்றார்.
