புரெவி புயலினால் ஏற்பட்ட கடும்மழை, பலத்தகாற்று மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் கோப்பாய் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட இருபாலை தெற்கு, இருபாலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனந்தபுரம், ஞானவைவரவர்கோயிலடி, வசந்தபுரம், மடத்தடி போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றாக செயலிழந்துள்ளது.
புதிய செம்மணிவீதி, கட்டப்பிராய் கலைமணிவீதி, சின்னக்கோவில்வீதி மற்றும் பலவீதிகள்,ஒழுங்கைகள் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் போக்குவரத்து செய்யமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றார்கள். பயன்தரு மரங்கள் பலவும் முறிந்துவீழ்ந்துள்ளதுடன் வீதிப்போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இன்று காலை முதல் குறித்த பிரதேசங்களின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் மக்களின் நலன்களை பேணும் வகையிலும்,இயல்பு நிலைமைகளை ஏற்படுத்துவதற்கும் கிராமசேவையாளர் ஊடாகவும்,பிரதேசசபையின் ஊடாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மக்களை வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் சிறுவர்கள் எவரையும் வெளியானபிரதேசங்களுக்கு நடமாட அனுமதிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.