துருக்கியில் உள்ள ஒரு ஹோட்டலொன்றில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 76 பேர் பலியாகியுள்ளனர். 51 பேர் காயமடைந்தனர்.
துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் கிப்ரிஸிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஹோட்டல் உள்ளது.
12 தளங்களைக் கொண்ட இதில் உள்ள உணவக பகுதியில் நேற்று அதிகாலையில் தீப்பிடித்துள்ளது. பின்னர் அந்தக் கட்டிடம் முழுவதும் தீ மளமளவென பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுக்களும் உடனடியாக அங்கு விரைந்தன. பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இச்சம்பவத்தையடுத்து துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் புதன்கிழமை தேசிய துக்க நாளாக அறிவித்துள்ளார். மேலும் சோகத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
