நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று முன்தினம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றோம். இச்சம்பவம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடைபெற்று குறிப்பிட்ட சில மணிநேரத்துக்குள் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பயணித்த வேனின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்வதற்குரிய விசாரணை தொடர்கின்றது.
நாடடில் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் நபர்களின் ஆட்சிகாலத்தில்தான் ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. கொலைகள் இடம்பெற்றன. இவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவில்லை.
நாம் உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றோம். எனவே, ஓரிரு சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் முடிவுக்கு வரமுடியாது. நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றமிழைத்தவர்கள் எமது ஆட்சியில் தப்பமுடியாது. சட்டத்தின்முன் நிச்சயம் நாம் நிறுத்தப்படுவோம். நீதிமன்ற சேவையாளர்களின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை.” – என்றார்.
