” அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இப்போது யாருக்கும் புரியாது. ஆனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது நாம்தாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
லிந்துலை அக்கரப்பத்தனை பகுதியில் நேற்று (24 தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்துடன் கலந்துரையாடி வரியினை குறைக்காவிட்டால் முதலில் பாதிக்கப்பட போவது தேயிலை தோட்டங்கள்தான். இதற்கு காரணம் புதிய வரி விதித்திருப்பது ஏற்றுமதி பொருட்கள் மீதே ஆகும். இதில் முதலாம் இடத்தில் இருப்பது தொழிற்சாலைகள், இரண்டாவது இடத்தில் தேயிலை.
இது இவ்வாறு இருக்க சம்பளம் மிக பெரிய பிரச்சினையாக அமையும். காரணம் தற்போது தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு பற்றி பேசுகின்றோம்.ஆனால் வரி விதிக்கப்பட்டால் சம்பளம் குறைக்கப்படும். அத்துடன் தேயிலை பறிக்கும் எடையின் அளவு அதிகரிக்கப்படும்.
கடந்த காலத்தில் பொருளாதாரத்தில் நாம் ஓரளவு வளர்ச்சி அடைந்து வந்தோம. காரணம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் தான் பொருளாதாரத்தை பற்றி நன்கு அறிந்த ஒருவராவார்.
ஆனால் தற்போது நாம் அனைவரும் பெரியதொரு ஆபத்தினை எதிர்கொள்ளப் போகின்றோம் பொருளாதாரத்தில் அதற்கு நாம் அனைவரும் எதிர்காலத்தில் தயாராகவே இருக்க வேண்டும். எனவே இனிவரும் காலங்களில் சிந்தித்து செயல்படுவீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.
அத்தோடு வீட்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்காக குறைந்த வீடுகளுக்கான திட்டமே உள்ளன. 2004 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் நிதி ஒதுக்கீடு செய்தது 550 மில்லியன் ஆனால் தற்போதைய அரசாங்கம் நுவரெலியா மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது 92 மில்லியன் ஏன் இவ்வாறு அக்கறையில்லாமல் செயல்படுகின்றார்கள்.
எல்லாம் வாய்சொல் வீரர்களாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் தீரப்போவதில்லை எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.