இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்தார்.
‘ இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இன்று அல்லது நாளை கலந்துரையாடலில் ஈடுபடுவார்.” எனவும் அவர் கூறினார்.
‘அங்கு நடக்கும் அனைத்தையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் வெளியுறவுத்துறை மட்டுமல்லாது, பல மட்டங்களில் தொடர்பில் இருக்கிறோம்.
தீர்வுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் ” – எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.