கொள்கலன்களில் இருந்தது புலிகளின் ஆயுதங்களா? மொட்டு கட்சி கேள்வி
“கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்தனவா அல்லது அதற்கு இருந்தவை எவை என்பது பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வி. சானக வலியுறுத்தினார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு இவ்வாறு வலியுறுத்தினார்.
“ சிவப்பு லேபல் ஒட்டப்பட்டிருந்த 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து ஆய்வின்றி விடுவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆயுதங்கள் இருந்தனவா, போதைப்பொருள் இருந்தனவா என்பன தொடர்பில் சுங்க அதிகாரிகளே சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலின்போது அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக செயற்பட்ட அர்ச்சுனா எம்.பி., தாய்லாந்தில் இருந்த பிரபாகரனின் ஆயுதங்களே வந்துள்ளன எனக் கூறியுள்ளார். அதிகாரிகளின் கூற்றும், அவரின் கூற்றும் பொருந்துகின்றன.
கொள்கலன்கள் தொடர்பில் நாம் முறையிட்டோம். விசாரணைக் கோரினோம். எனினும், கொள்கலன்களில் என்ன வந்தது என்பதை அரசாங்கம் ஏன் ஒளிக்கின்றது. குறித்த கொள்கலன்களில் இருந்தவை எவை என்பது பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். ஏன் இவ்வளவு காலம் மறைக்கப்படுகின்றது என்பது பற்றியும் விளக்கம் தேவை.” – எனவும் மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
