சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு நிராகரித்தார்.
“சுங்கத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை சீர்செய்வதற்காகவே குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவின் நிர்ணயங்களுக்கமைய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.
பிளாஸ்டிக், துணி, நூல் வகைகள், இரசாயனம் உட்பட தொழில்துறைகளுக்கு தேவையான மூலப்பொருட்களே அவற்றில் இருந்தன.
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப்போல ஆயுதங்களோ, தங்கமோ அல்லது போதைப்பொருளோ அவற்றில் இருக்கவில்லை.
கொள்கலன்களை விடுவிப்பதற்கு முன்பு, இறக்குமதி ஆவணங்கள் அனைத்தும் உரிய வகையில் சரிபார்க்கப்பட்டன. அச்சுறுத்தல் இல்லை எனக் கருதப்பட்ட கொள்கலன்களே விடுவிக்கப்பட்டன. சிஐடியினருக்கு அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. விசாரணைகளில் உண்மை வெளிவரும்.
கொள்கலன்களை விடுவிப்பதற்கு அழுத்தங்கள் எதுவும் பிரயோகிக்கப்படவில்லை.” -என்றார்.