செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டவல தெரிவித்தார்.
குறிப்பாக செம்மணி தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்கம் அந்த நடவடிக்கைகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
தமிழ் நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர்,
‘ மேற்படி விவகாரங்கள் தொடர்பில் எம்மிடம் உள்ள தகவல்களை நாம் வெளியிட மாட்டோம். அவற்றை வெளியிட்டால் அதைப் பெற்றுக் கொள்வோர் அதனை எவ்வாறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவார்கள் என தெரியாது. இந்த விடயங்களில் எவரது அவசரத்திற்கும் ஏற்ப எம்மால் செயற்பட முடியாது.
கடந்த அரசாங்கம் அவ்வாறு செயற்பட்டாலும் எமது அரசாங்கம் ஒருபோதும் அவ்வாறு செயற்படாது. அரசாங்கம் என்ற வகையில் நாம் மிகவும் பொறுப்புடன் செயற்படுவோம்.” எனவும் குறிப்பிட்டார்.
