தமிழினப் படுகொலையை ஆதாரபூர்வமாக எண்பிப்பதற்கான சாட்சியமாக வெளிப்பட்டிருக்கும் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியமானது என்பதுடன், ஸ்கானிங் இயந்திரம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியோடு அப்பகுதியில் முழுமையான அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானப்பகுதியில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், இன்றையதினம் குறித்த பகுதியை நேரிற்சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
1995 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையும் முழுக்க முழுக்க இராணுவ முகாமாகவும், இராணுவக் கட்டுப்பாட்டு வலயமாகவும் கையகப்படுத்தப்பட்டிருந்த செம்மணிப் பகுதியில் இனங்காணப்படும் மனித என்புத் தொகுதிகள் சாதாரணமாக புதைக்கப்பட்டவை தான் என்று கூற முற்படுவது மிக அபத்தமானது.
இந்துக்களின் சடங்குமுறையில் உடலங்களை கூட்டாக அடக்கம் செய்வதோ, ஆடைகளற்று அடக்கம் செய்வதோ பின்பற்றப்படுவதில்லை. அவ்வாறிருக்க ஒரு இனத்தின் பலதசாப்தகாலப் போராட்டத்துக்கான சாட்சியமாக அணுகத்தக்க முக்கியத்துவம் மிக்க விடயமொன்றை மடைமாற்றும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்.
அத்தகைய அரச ஒத்தோடிகளின் செயற்பாடுகளைக் கடந்து, செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் முழுமையாக நடைபெற்று உண்மைகள் கண்டறியப்படுவதற்காக, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கவனத்தைக் கோரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வோம் – என்றார்.