செம்மணிப் புதைகுழியில் இன்று ஸ்கான் பரிசோதனை ஆரம்பம்!

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனிதப் புதைகுழிகளுக்கு மேலதிகமாக வேறு மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதனைக் கண்டறியும் நோக்குடன் ஸ்கான் பரிசோதனை இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம் பரந்துபட்ட ஸ்கான் பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுக்கப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப் பெறவில்லை

இந்நிலையில், ஶ்ரீ ஜெயவர்வத்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ்ப்பாணம் பல்கலைகழகம் ஊடாகப் பெற்று அதைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த நடவடிக்கையையடுத்து இன்று திங்கட்கிழமை குறித்த ஸ்கானரைப் பயன்படுத்தி பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

நாளை செவ்வாய்க்கிழமையும் மதியம் வரை ஸ்கான் பரிசோதனை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களைப் பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் நாளை செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சான்றுப்பொருட்களைப் பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles