நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு எமது அரசாங்கம் முன்மாதிரியாக செயல்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
வங்குரோத்து நிலையில் இருந்த நாடே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியாக பாதிப்புகள் இருந்தன. எனவே, பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதற்கு கடந்த ஒரு வருடமாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நாட்டில் அரசியல் கலாசாரம் மாற்றப்பட்டு வருகின்றது. சிறந்தொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். புதிய அரசியல் கலாசாரம் என்றால் என்னவென்பதை நாம் செயலில் காட்டியுள்ளோம்.
பிரதமருக்கு மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு 33 லட்சம் ரூபா, ஆனால் எமது பிரதமர் 4 லட்சம் ரூபாதான் பயன்படுத்துகின்றார். ஏனையவற்றை திறைசேரிக்கு அனுப்பி விடுகின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சராக இருந்தால் , நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளம் மற்றும் அமைச்சருக்குரிய சம்பளம் கிடைக்கப்பெற்றது. சலுகைகளும் அப்படிதான். ஆனால் எமது ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை மட்டும் தாருங்கள், வேறு எதுவும் வேண்டாம் என அமைச்சர்கள் கடிதம் அனுப்பினர்கள். நாம் இரண்டு சம்பளம் பெறவில்லை.
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் இருந்தன. அவற்றை நாம் பெறவில்லை. எமது சபாநாயகர்கூட சபாநாயகருக்குரிய அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு செல்லவில்லை.
கடந்த காலங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடின. இவற்றை ஒழிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர் சமுதாயகத்தை நாம் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். போதைப்பொருள் வியாபாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் கறுப்பு அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது அரசாங்கத்துக்கு இருக்கும் மிக முக்கிய பொறுப்புகளில் இதுவும் ஒன்றாகும். நிச்சயம் போதைப்பொருளை ஒழிப்போம். என்றார் அமைச்சர்.










