கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது தமிழர் தாயகப் பகுதியின் நிகழ்கால அரசியல் நிலவரங்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் அரசின் நிலைப்பாடுகள், திட்டமிட்ட தமிழர் நில அபகரிப்புக்கள், கிவுல் ஓயா திட்டம் போன்றவற்றின் ஊடாக தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடயங்கள் கனடாவின் புதிய தூதுவருக்குச் சிறீதரன் எம்.பியால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
புதிய தூதுவராக வருகை தந்திருந்த இஸபெல்லா மார்ட்டின் மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக மேலதிக விடயங்களையும் ஆர்வமாகக் கேட்டறிந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது போரின் பின்னர் தமிழர் பகுதிகளில் முளைத்துள்ள புதிய விகாரைகள், அரசியல் கைதிகள் தொடர்பான சில விடயங்களை ஆவணங்களுடன் புதிய தூதுவருக்குச் சிறீதரன் எம்.பி. தெளிவுபடுத்தியிருந்தார்.
சந்திப்பின்போது வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஒரு நினைவுச்சின்னமும் தூதுவர் இஸபெல்லா மார்ட்டினுக்குச் சிறீதரன் எம்.பியால் வழங்கிவைக்கப்பட்டது.










