“வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதேவேளை, அபிவிருத்திப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.” – என்று அநுர அரசு உறுதியளித்துள்ளது.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.
“அரசு என்ற வகையில் நாட்டினுடைய அபிவிருத்தியை எந்தத் தடைகளும் இல்லாமல் மேற்கொண்டு வருகின்றோம்.
அந்தவகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் காத்திருப்பு பகுதி வேலைகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
கடந்த அரசில் குறித்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும் முழுமையான விமான நிலையமாக மாற்றம் பெறாத நிலையில் எமது அரசு அதனை முழுவீச்சில் செயற்படுத்தி வருகின்றது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.”- எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் விமான சேவைகள் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்ற நிலையில் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும்.
வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளார்.
எமது அரசு நாட்டில் வாழுகின்ற சகல இன, மத மக்களை இணைத்துக் கொண்டு புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஓர் அரசாக ஆட்சிக்கு வந்தது யாவரும் அறிந்த விடயம்.
எமது அரசின் பயணத்தைத் தடுத்த நிறுத்தலாம் எனச் சிலர் நினைக்கின்றார்கள். காரணம் கடந்த காலங்களைப் போல் திருடர் யுகம் ஒன்றை மீண்டும் கொண்டு வருவதற்காக அவர்கள் துடிக்கின்றார்கள்.
இந்த நாட்டை மீண்டும் ஒரு அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு இன்னும் சிலர் இனவாதத்தை கையில் எடுக்கின்றார்கள். அது அவர்களின் அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இழந்து போன அரசியலை மீண்டும் புத்துயிர் கொடுப்பதுக்குமே.
ஆகவே வடக்கு மக்களுக்குத் தெளிவாக ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன், எமது அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஓர் அரசாகச் செயற்படும் அதேவேளை அபிவிருத்திப் பணிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.” – என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
……………
