மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட சிவபூஜை வழிபாடுகளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கௌரவப் பிரமுகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, விசேட அபிஷேக மற்றும் ஆராதனை பூஜைகளில் அவர் பங்கேற்றார்.
நாட்டின் அமைதி, சுபீட்சம் மற்றும் இனங்களுக்கிடையிலான மத நல்லிணக்கத்தை வேண்டி நடைபெற்ற இந்த வழிபாடுகளில், பிரதமருடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர்.
சிவராத்திரி தினத்தில் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரத்துக்குப் பிரதமர் வருகை தந்தமையானது, நாட்டின் கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
வழிபாடுகளின் பின்னர், பிரதமர் ஆலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புகளையும் கேட்டறிந்துகொண்டார்.
