“உரையாடுவதற்குரிய உரிமையை மறுப்பதானது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களில் இடம்பெறவிருந்த தனது உரைகள் திடீரென இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் நாமல் ராஜபக்ச எம்.பி. இன்று (23) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அழுத்தங்கள் காரணமாக தமது உரைகள் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் அதில் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
“ அச்சுறுத்தல்கள் மூலம் மௌனமாக்குவதை விட, தர்க்கரீதியான விவாதங்கள் மூலமே மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது கொள்கைகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபடத் தான் தயாராக இருப்பதாகவும், உரையாடல்களை மறுப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்ட சில குழுக்களின் அழுத்தங்களால் பல்கலைக்கழக ஒன்றியங்கள் எடுத்த முடிவு வருத்தமளிக்கின்றது.
எனினும், இக்கட்டான சூழ்நிலையிலும் தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினைகளை விட ஆரோக்கியமான விவாதங்களே நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என மேற்படி அறிக்கை ஊடாக நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.










