படல்கும்புர, அலுப்பொத பகுதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில், படல்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் சடலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உறவினர்கள் நேற்று வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தைப் பொறுப்பேற்று, படல்கும்புர நோக்கிப் புறப்பட்டனர்.
வீட்டிற்குச் சென்றதும் இஸ்லாமிய மத முறைப்படி சடலத்தைக் குளிப்பாட்டுவதற்குத் தயாரான போதே, அது அந்தப் பெண்ணின் சடலம் அல்ல என்பதும், வேறொரு ஆணின் சடலம் என்பதும் கண்டறியப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக அந்த ஆணின் சடலத்தை மீண்டும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். அதன் பின்னரே, உயிரிழந்த பெண்ணின் உண்மையான சடலம் உரிய முறையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் நேற்றைய தினம் மத வழிபாடுகளின்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. வைத்தியசாலையின் இந்த அலட்சியப் போக்கால், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கடும் அசெளகரியத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.










