செவ்வாய்க்கிழமையன்று ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில் முதற்கட்ட மதிப்பீட்டின்படி 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 1 மீட்டர் (3.28 அடி) உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜப்பானின் தெற்கு கியூஷு (Kyushu) தீவில் உள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஓய்டா, மியாசாகி ஆகிய மாகாணங்களுக்கு ஜப்பான் அரசு அவசர நிலநடுக்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
உலகிலேயே நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். அங்கு குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை நிலநடுக்க அதிர்வு பதிவாகிறது.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள “நெருப்பு வளையம்” (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளதால், உலகில் ஏற்படும் 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கங்களில் சுமார் 20% ஜப்பானிலேயே நிகழ்கின்றன.
நிலநடுக்கத்திற்குப் பிறகு தங்கள் செண்டாய் (Sendai) மற்றும் கென்காய் (Genkai) அணுமின் நிலையங்களில் எந்தவித அசாதாரண சம்பவங்களும் பதிவாகவில்லை என்று கியூஷு எலக்ட்ரிக் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதிவேக ‘ஷின்கான்சென்’ (Shinkansen) ரயில்கள் உட்பட தங்கள் ரயில் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக ஜே.ஆர் கியூஷு (JR Kyushu) ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.










