அனைத்து மதுபானங்களினதும் தரம் குறைந்துள்ளதாக மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிப்பு

நாட்டில் பிரதானமாக மதுபான தயாரிப்பில் ஈடுபடும் பெரும்பாலானவர்களினால் தயாரிக்கப்பட்டு மதுபானசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் மதுபானங்களை உட்கொண்ட பாவனையாளர்கள் பெரும்பாலானோர் பல்வேறு ஒவ்வாமை மற்றும் அசெகரியங்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமொன்றின் அதிகாரி ஒருவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் மதுபானசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட பெரும்பாலான மதுபானங்களின் தரம் மற்றும் சுவை குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த மதுபானங்களை உட்கொண்ட பலருக்கு தொண்டை வலி, தலை வலி மற்றும் அசாதாரண வாந்தி போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாக அந்த பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள முன்னணி மதுபான நிறுவனத்தின் அதிகாரி மேலும் தெரிவிக்கையில், உள்ளுர் தயாரிப்பின்போது எத்தினோல் மூலப்பொருட்களினால் மதுபானம் தயாரிக்கப்படுகின்றமையே இதற்கு பிரதான காரணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். எத்தினோல் என்ற மூலப்பொருளை இறக்குமதி செய்வதற்கு அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக கடந்த ஜனவரி முதல் எத்தினோலை இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, பெலவத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் எத்தினோல் பயன்படுத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதுடன், விநியோக நடவடிக்கைகள் இலங்கை கலால் திணைக்களத்தின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கலால் ஆணையர் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles