இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் உட்பட்ட குழுவினர் (26.02.2026) நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இன்று 26.02.2026 காலை 12.30 மணியளவில் உலங்கு வானூர்தி மூலமாக பொலன்னறுவையில் இருந்து நுவரெலியா மாநகர சபை பொது விளையாட்டு மைதானத்திற்கு வந்திரங்கிய சுவாமிகள் உட்பட்ட குழுவினரை நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர மற்றும் பிரதி முதல்வர் சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா உள்ளிட்ட மாநகர சபை குழவினர் வரவேற்றனர்.
அங்கிருந்து சுவாமிகள் நுவரெலியா பதுளை பிரதான வீதியூடாக வாகன பேரணி மூலமாக சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டார்.ஆலயத்தில் நிரவாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதன்போது சுவாமிகளுடன் வெளிநாட்டு வேலைவாபய்ப்ப மற்றும் சுற்றுலாதுறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி மற்றும் பொது மக்களும் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.சுவாமி ஆலத்தில் நாள்தோறும் முன்னெடுக்கப்படுகின்ற அன்னதானத்தை ஆரம்பித்து வைத்ததுடன் பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கினார்.
தொடர்ந்து சீதையம்மன் ஆலயத்தின் பிரதம குருக்கள் ரஜீவன் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தார்.அதனை தொடர்ந்து ஆலய நிர்வாக சபையினால் சுவாமிக்கு ஆலயத்தின் சார்பாக நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் இந்தியாவின் அண்மையில் நடைபெற்ற கும்பமேலா நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் பிரதான பங்கு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.










