அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16வது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பல்வேறு பொறுப்புகள் மற்றும் திட்டங்கள் உள்ளதாகவும் அந்த அனைத்து நிறுவனங்களும் இந்தத் தருணத்தில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணப் பணிகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அனைத்து நிறுவனங்களும் ஒரே நோக்கத்திற்காக, ஒரு கட்டமைப்பாகச் செயற்பட்டு, சரியான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணத்தை வழங்க முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், இதற்காகத் துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான மற்றும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காகப் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைக்குப் பின்னர், அவர்களின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய வீடுகளை விரைவாகக் கட்டி முடிப்பது தொடர்பாகவும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.
இந்த வீட்டுத் திட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருடன் விசேட கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை விரைவாக வழங்கி முடிக்குமாறும், இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்காத மக்களின் மேன்முறையீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொத்தா, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குமுதுலால் போகஹவத்த, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார,
அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மேலதிக செயலாளர் கே. ஜி. தர்மதிலக, வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலைய சிரேஷ்ட உதவிச் செயலாளர் நாமல் லியனகே, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகொட ஆகியோர் மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.










