நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி: சுரேஸ் சலே கைது ஏமாற்று நடவடிக்கை!

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்புலத்தில் அரசியல் நோக்கமே உள்ளது.”

இவ்வாறு முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது அரசாங்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு கூறினார்.

“பேராயர்,கத்தோலிக்க சபை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கையாகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகள் அரசாங்கத்தை சபிக்கின்றனர். நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளது. இவற்றை திசை திருப்புவதற்காக இக்கைது இடம்பெற்றிருக்கலாம்.” எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

சனல் 4 ஊடகமென்பது இராணுவத்துக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கும் ஊடகமாகும். அதில் அசாத் மௌலானா தெரிவித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது ஏற்புடையது அல்ல.

சுரேஷ் சலே என்பவர் 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர்வரை மலேசியாவில் இருந்தார். அதன்பின்னர் இந்தியாவில் இருந்தார். தாக்குதல் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் அவர் இலங்கையில் இருக்கவில்லை.

நௌபர் மௌலவிதான் பிரதான சூத்திரதாரியாவார். வெளிநாட்டு விசாரணைகள்கூட இதனையே வெளிப்படுத்தின. நிலைமை இவ்வாறு இருக்கையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதற்குரிய காரணம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.” எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles