யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்ட ஜேர்மனியின் பிரேமன் நகர மண்டபத்தில், பிரேமன் மேயர் ஆண்ட்ரியாஸ் போவன்சுல்ட் தனக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
“பிரேமன் மேயருடனான இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, வாகன உற்பத்தி, வர்த்தகம் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பிரேமன் நகரம், இலங்கையில் தற்போது உருவாகி வரும் புதிய பொருளாதார வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்துச் சுமூகமான முறையில் ஆலோசிக்கப்பட்டது.
ஜேர்மனியப் பயணிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகத் தொடர்ந்து மாறி வருகிறது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத்துறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தச் சந்திப்பு மிக முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.










