அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்ற நாடுகளில் அரசாங்கங்களை மாற்ற எடுத்த நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் இதுபோன்ற நடவடிக்கைகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு செவ்வியளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் விவகாரம் மிகவும் தீவிரமான மற்றும் சிக்கலான பிரச்சினை. இவ்வாறான முறையில் ஒரு அரசாங்கத்தை வலுக்கட்டாயமாக அகற்றுவது, ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல.
இந்த நடவடிக்கைகள் அனைத்துலக சட்டம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய நடைமுறைகளுடன் இணங்கவில்லை என்று சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன.
ஈரானின் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டாலும், இலங்கை உடனடி எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ள வாய்ப்பில்லை.
அத்தகைய இழப்புகளை ஈடுசெய்ய மற்ற நாடுகள் போதுமான எண்ணெயை உற்பத்தி செய்கின்றன.
இருப்பினும், ஈரான் இந்தப் பகுதி வழியாகச் செல்லும் எண்ணெய் தாங்கிகளைத் தாக்கத் தொடங்கி, எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால், அது ஒரு கடுமையான பிரச்சினையாக மாறும். அது இன்னும் நடக்கவில்லை.
ட்ரம்ப் உலகம் தான் விரும்பியவாறு செயற்பட வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் இது எமக்கு நல்லதல்ல, இந்த பிரச்சினை மிகவும், குழப்பமான விடயம்” என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.










