பொகவந்தலாவை மோரா தோட்டப் பகுதியில் இயங்கி வந்த தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிர்வாகம் நேற்று புதன்கிழமையிலிருந்து கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்பட ஆரம்பித்துள்ளது என்று மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிகால்வீரசூரிய தெரிவித்தார்.
மேற்படி சிகிச்சை நிலையத்தில் முதற்கட்டமாக லிந்துலை, பத்தனை ஆகிய பகுதியிலிருந்து 10 தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் இனங்காணப்படுகின்ற தொற்றாளர்களும் இதில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலை காரணமாக, தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு – தனிமைப்படுத்துவதற்கு நுவரெலியா மாவட்டத்தில் கடந்த காலங்களில் மூன்று நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டன.
இதில் பொகவந்தலாவை மோரா பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை நிலையத்தில் மாத்திரம் ஒரே தடவையில் 138 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கமுடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.










