675-ற்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த டித்வா பேரழிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில்,
புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் குடும்பங்கள் இன்னும் உதவியற்ற நிலையில் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருவதாக ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பெருந்தோட்டத் துறையில் அத்தகைய நடவடிக்கைகளின் மிகவும் மந்தக் கதியில நடைபெறுவதாக, பேரழிவால் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறை சாத்தியமான முன்மொழிவுகளுடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் பங்கேற்புடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடித் தலையீட்டின் கீழ் இந்த முன்மொழிவுகள் செயல்படுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கை கோருகிறது.
‘டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு’ என்ற தலைப்பில், மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையொப்பம் இடும் செயற்பாடு, 2026 மார்ச் 19 அன்று, கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் எந்தவொரு நிரந்தரத் தீர்வுமின்றி பாடசாலைகள், தற்காலிக முகாம்கள், கூடாரங்கள் மற்றும் பழைய பாழடைந்த தோட்டக் கட்டிடங்களில் இன்னும் வசித்து வருவதாகவும், பலர் தங்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தாலும், அந்த வீடுகள் வசிப்பதற்குப் பாதுகாப்பற்றவை என அவர்கள் கூறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றத்திற்கான காணிகள் விடுவிப்பது குறித்து இன்னும் தெளிவில்லாத தன்மை காணப்படுவதாகவும், அரசாங்கம் அறிவித்த நிவாரணங்களைப் பெறுவதில் காணி உரிமையற்ற மலையகத் தமிழ் மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தோட்டப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யும் பொறுப்பு நிறுவனங்களுக்கா அல்லது அரசாங்கத்திற்கா எனும் இழுபறி இன்னும் நீடிப்பதாகவும், அரசாங்கத்தின் கொள்கைத் தெளிவின்மையும், மந்த கதியிலான செயல்பாடுகளுமே இதற்குப் பிரதான காரணங்கள் எனவும் அறிக்கையில் வலியுத்தப்பட்டுள்ளது.
டித்வா பேரனர்த்தம் மலையகத் தமிழ் சமூகம் மீது ஏற்படுத்திய பாரிய தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, தோட்டப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு துயருறும் பின்னணியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம் மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு 15 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
1.பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பங்களுக்கு முழுமையாகச் சேதமடைந்த மற்றும் மீள்குடியேற்ற வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாயும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபாய் வரையும், தேவைப்படின் காணிக்கு மேலதிகமாக 50 இலட்சம் ரூபாய் வரையும் வழங்கப்பட வேண்டும்.
2.நாட்டின் ஏனைய குடிமக்களுக்கு சமமாக எவ்வித பாரபட்சமுமின்றி தகைமையுள்ள மலையக மக்களுக்கும் வீடு மற்றும் ஏனைய பாதிப்புகளுக்கான நிவாரணம் மற்றும் நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். தோட்டத்தில் வேலை செய்பவர்கள்,வேலை செய்யாதபவர்கள் என்ற பாகுபாடு அனர்த்த நிவாரண மற்றும் மீள்கட்டுமானத்தில் காட்ட கூடாது.
3.மலையக மக்களுக்கு இந்நாட்டின் நிலத்தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் தோட்டப் பகுதிகளில் காணி உறுதியுடன் கூடிய தனி வீடுகள் வழங்கப்படல் வேண்டும். தோட்டப் பகுதிகளில் மாடி வீட்டுத் திட்டங்கள் வேண்டாம்.
4.இந்திய வீடமைப்புத் திட்டத்தை டித்வா பேரனர்த்த நிவாரணத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. அது தனித்திட்டமாகத் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
5.டித்வா வீடமைப்புத் திட்டங்கள் முறையான வீதிகள், முகவரி, மின்சாரம், குடிநீர், சமூகக் கட்டமைப்புகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் கொண்ட கிராமங்களாக மலையக குடியேற்றங்கள் மீள்கட்டமைக்கப்பட வேண்டும். “தோட்ட முறைமை ஒழிந்து புதிய கிராமங்களாக நிலைமாற்றம் பெற வழிவகுக்க வேண்டும்.
6.காணி உரிமை வழங்கவும், புதிய கிராமங்களை உருவாக்கவும் பெருந்தோட்டக் கம்பனிகளுடனான குத்தகை ஒப்பந்தங்கள் உடனடியாக திருத்தப்பட வேண்டும்.
7.தற்காலிக முகாம்களில், கூடாரங்களில் மற்றும் ஏனைய இடங்களில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களை அலைக்கழிக்காமல் கண்ணியத்துடனும், கௌரவத்துடனும் நடாத்தி, அவர்களுக்கு வீடுகளுக்கான காணி தெரிவு செய்யும் போது குடும்பங்களுடன் கலந்தாலோசித்துத் தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.
8.காணிக்கான உரிமை பெண்களுக்கும் சமமாக வழங்கப்படவேண்டும்.
9.காணி உரிமையுடன் கூடிய நிரந்தர வீட்டுத் தீர்வு கிடைக்கும் வரை சர்வதேசத்தர நியமங்களுக்கு அமைவாக (SPHERE Standards) இடைக்கால (Transitional shelter) வீடுகள் அடிப்படை வசதிகளுடன் உசிதமான இடங்களில் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
10.பாதிக்கப்பட்டமலையகத் தமிழ் குடும்பங்களுக்கான அரச நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை (விவசாயம், கால்நடை, தொழில், வாழ்வாதாரம் என்பன) வழங்கும் போது வெறும் சமத்துவத்திற்கு அப்பால் நீதியான (Equitable) அணுகுமுறையை அரசு கடைபிடிக்க வேண்டும்.
11.இலங்கையின் ஏனைய குடிமக்கள் போலவே பெருந்தோட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் சேவைகள் என்பன பிரதேச செயலகம், மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக வழங்கப்பட வேண்டும். கம்பனி மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக அல்ல.
12.மலையகத் தமிழரின் மொழி உரிமை மதிக்கப்பட வேண்டும். அனைத்து விண்ணப்பப் படிவங்கள், அறிவித்தல்கள் மற்றும் தொடர்பாடல்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும். அரச அலுவலகங்கள் இக்குடும்பங்களுடன் தமிழில் தொடர்புகொள்வதை உறுதி செய்தல் வேண்டும்.
13. நிவாரணம், நட்டாடு பெற்றுக்கொள்வதில் சிரமம், குறைகள் இருப்பின் அவற்றை முறைபாடு செய்து தீர்வுகள் பெற குறைதீர் ஏற்பாடுகள் (Grievance Mechanism) பிரதேச,மாவட்ட, தேசிய மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.
14. எந்தவொரு குறுகிய கால பேரனர்த்த நடவடிக்கையும் மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால காணி மற்றும் வீட்டு உரிமை கோரிக்கைகளுக்கு முரணாகவோ அல்லது சமரசம் செய்வதாகவோ இருக்கக் கூடாது.
15. தோட்டப் பிரதேசங்களில் டித்வா பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாலங்கள், வீதிகள், படிகட்டுகள், பாதுகாப்புச் சுவர்கள் சமூக கட்டிடங்கள், என்பவற்றைச் சீர்திருத்தும் பொறுப்பை அரசாங்கம் எடுக்க வேண்டும். பிரதேச சபைகள் தோட்ட உட்கட்டுமான பணிகளுக்கு நிதியீட்டம் செய்யலாம் என்ற சட்டத் திருத்தத்தை உள்ளூராட்சிமன்றங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
மேற்சொன்ன கொள்கைத் தீர்மானங்களை எடுத்து, நிர்வாகச் செயற்பாடுகளுக்கு உத்தரவிட்டு நிவாரண, மீள்கட்டுமான நடவடிக்கைகளை மலையகப் பிரதேசங்களில் துரிதப்படுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீடு அவசியமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே இந்த முன்மொழிவுகள் குறித்துக் கலந்துரையாட வாய்ப்பளிக்குமாறும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு கோரிக்கை விடுத்துள்ளது.
டித்வா பேரனர்த்தத்தால் பாதிப்புற்று அல்லலுறும் மலையக மக்கள் சார்பாக முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியியலாளர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மலையக மக்களைப் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள் தமது நிலைப்பாட்டினை ஏற்று அரசாங்கத்தில் தீர்மானம் எடுப்பவர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ள மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு, இணைந்து செயலாற்றவும் அழைப்பு விடுத்துள்ளது.
