இலங்கை கிரிக்கெட் சபையின் ஆலோசனைக்கு அமைவாக, நுவரெலியா கிரிக்கெட் சங்கமும் மத்திய மாகாண கிரிக்கெட் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட மட்ட வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கை இன்று (24.03.2026) நுவரெலியா மாநகர சபையின் பொது மைதானத்தில் காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் மொத்தம் 280 வீரர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். வயது அடிப்படையில் 13, 15, 17, 19 மற்றும் 25 வயதிற்குட்பட்டோர் என பல்வேறு பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
மேலும், பயிற்சியாளர்களுக்கான தேர்வும் இதனுடன் இணைந்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வுகளின் மூலம் தெரிவு செய்யப்படும் வீரர்களுக்கு மாவட்ட மட்டத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதன் பின்னர் திறமையை வெளிப்படுத்தும் வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு பெறுவார்கள்.
இந்நிகழ்வு இரண்டு நாட்கள் கொண்டதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் நேற்று நுவரெலியாவின் நோவுட் மைதானத்தில் நடைபெற்றதுடன், இரண்டாம் நாள் இன்றைய தினம் மாநகர சபை பொது மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு, எதிர்கால இலங்கை கிரிக்கெட்டிற்கான திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறியும் ஆரம்ப கட்டமாக பார்க்கப்படுகிறது.
– கஜரூபன் திவ்யா










