“மலைநாட்டு மக்களின் மரியாதையை தாழ்த்தும் எந்தவொரு கருத்தையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். புரட்சிகர மக்கள் சக்தியாக நாம் மலையக மக்களையும், அவர்கள் சார்ந்த இன, மத, பிரதேச ரிதியாக இழிவாகப் பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
இவ்வாறு புரட்சிகர மக்கள் சக்தி செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
காலத்திற்கு காலம் மலையக மக்களையோ அல்லது மலையகத்தை சார்ந்தவர்களை இன மத ரீதியாக, பிரதேச ரீதியாக பாகுபடுத்தி அவதூறாக சித்தரிக்கும் நிலைமை கடந்த காலங்களில் அதிகரித்துவருவதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
தற்சமய இலங்கை அரசியலை உற்று நோக்கினால் வடகிழக்கு, மலையகம் என அனைத்து
சிறுபான்மை சமூகங்களும் ஐக்கியத்துடன் ஒற்றுமையாக செயல்பட கைகளை நீட்ட வேண்டுமே தவிர அவமானப்படுத்துவதற்காகவோ, சமூகங்களை எதிர்க்கவோ எமது கைகளை நீட்ட கூடாது. இதனை பெரும்பாலான அரசியல் தலைமைகள் உணர்ர்ந்திருந்தாலும் கூட ஒரு சிலரது தகாத நடவடிக்கைகளினால் அனைவரும் பழியேற்க வேண்டிய நிலமைக்கு தள்ளப்படுவது துரதிர்ஷ்டமான செயலாக அமைந்துவிடுகின்றது.
ஒருசில மக்களால் தெரிவுசெய்யப்பட மக்கள் பிரதிநிதிகள் தம்மை தெரிவு செய்த மக்களுக்கு எந்தவொரு சேவையும் வழங்காமல், எந்தவொரு நன்மையும் பயக்காமல் தம்முடைய வங்குரோத்து அரசியலை மூடி மறைக்க இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு சிறுபான்மை இன குழுக்களுக்கு மத்தியில் இன, மத , ரீதியாக கடும் வார்த்தை பிரயோகங்களால் சமூகங்களுக்கிடையில் நெருப்பை கொளுத்தி விட்டு குளிர் காய எண்ணினாலும், எமது மக்களின் மீது என்றும் மரியாதை கொண்ட, பொறுப்புள்ள அரசியலாளர்களாக, புரட்சிகர மக்கள் சக்தியாக நாங்கள் இவற்றை முறையாக கையாளவும், மக்களிடையே அமைதியை பேணவும், இன ஐக்கியத்தை பேணவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
நாம் அந்த கடமையை சரிவர நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம்.
மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக, புரட்சிகர மக்கள் சக்தியின் செயலாளர் நாயகமாகவும், மலையக பெண்ணாகவும், பட்டதாரியாகவும் மலைநாட்டு மக்களின் மரியாதையை தாழ்த்தும் எந்தவொரு கருத்தையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். புரட்சிகர மக்கள் சக்தியாக நாம் மலையக மக்களையும், அவர்கள் சார்ந்த இன, மத, பிரதேச ரிதியாக இழிவாகப் பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எனது தந்தையும், பெருந்தலைவருமான பெ. சந்திரசேகரன், மலையக மக்களின் உரிமைக்காக மட்டுமல்லாமல் வடகிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் நலன்களுக்காகவும் தன்னலமின்றி குரல் கொடுத்தவர்.
மலையகத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் அளவுக்கு உயர்ந்த உள்ளமும், பண்பும் படைத்தவராக விளங்கியவர்.
இவ்வாறான சமூக ஒற்றுமை முயற்சிகளே சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் வலுவான உறவை உருவாக்கும். சிறுபான்மை சமூக குழுக்களான எங்களுக்குள் பரஸ்பர மரியாதையும் ஒற்றுமையும் மிகவும் அவசியமானவை.
ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்துவமான வரலாறு உள்ளது. அதைப் போலவே, மலையக மக்களுக்கும் 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளது. பல சவால்களையும் தாண்டி, கல்வி, கலை, கலாச்சாரமென ஒவ்வொரு துறையிலும் எங்கள் சமூகமானது உயர்ந்து வளர்ந்து வருகிறது.
அதுமட்டுமன்றி சிறுபான்மை சமூகங்களாக நாம் ஒன்றிணைந்து நமது மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எமது மக்களின் உரிமைகளுக்காகவும் அபிவிருத்திக்காகவும் போராடவேண்டும். இது புரட்சிகர மக்கள் சக்தியாக எங்கள் கட்சியின் கோரிக்கையாக இருப்பதுடன் இனிவரும் காலங்களில் மலையக மக்களை அவமதிக்கும் விதமாக செயற்பட எண்ணுபவர்களுக்கு விடுக்கப்படும் உறுதியான எச்சரிக்கையும் ஆகும்.










