“அதிவேகமாக அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களை உடனடியாகக் குறைத்து, மக்களுக்கு விசேட பொருளாதார நிவாரணப் பொதியொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“திடீர் விலையேற்றங்கள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சாதாரண குடிமக்களின் கஷ்டங்களை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது.
எரிவாயு விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும், தொடர்ச்சியான விலையேற்றமும் மக்களைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
மத்திய கிழக்கு யுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படக்கூடிய அபாயம் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படும் என நாம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால், ஆரம்பத்தில் அதனைப் பொருட்படுத்தாத அரசாங்கம், தற்போது அதன் பாதிப்புகளை மக்கள் மீது சுமத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா மற்றும் எகிப்து போன்ற நாடுகள் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது மக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகின்றன.
அதேபோன்று, இலங்கையிலும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை இலக்காகக் கொண்டு விசேட பொருளாதார நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் திறைசேரியில் மேலதிக நிதி இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியம் நாட்டின் வருமானம் அதிகரித்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இந்த வளங்களைப் பயன்படுத்தி எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். மக்கள் உண்மையாகவே பயனடையக்கூடிய நிவாரணப் பொதியொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், அதற்கு எதிர்க்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும்.
மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பல்ல. அவர்கள் வாழ்வதற்கு வழிவகுப்பதே அரசாங்கத்தின் கடமை. எனவே, கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று சஜித் பிரேமதாஸ மேலும் வலியுறுத்தியுள்ளார்.
