இந்திய துணை ஜனாதிபதியிடம் மலையக பிரதிநிதிகள் கூறிய விடயங்கள் எவை?

இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு, மலையக கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் நேற்று நடைபெற்றது.

தமிழ் முற்போக்கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், அரசியல்குழு உறுப்பினர்களான பாரத் அருள்சாமி, ராஜாராம் ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், முன்னாள் எம்.பி. ஜெகதீஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் கூறியவை வருமாறு,

“இந்திய துணை ஜனாதிபதியுடனான சந்திப்பானது, கடந்த காலங்களில் இந்திய தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பக்களின் தொடர்ச்சியானதாகும்.

குறிப்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தபோதும், அவரைத்தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வருகை தந்திருந்தபோதும் இந்திய வம்சாவழி மக்கள் ஏனைய மக்கள் சமூகங்களுடன் பார்க்கையில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்பதை தெளிவுபடுத்தியிருந்தேன்.

உதாரணமாக, தென்னாபிரிக்கா, பீஜி தீவுகள், மொறிசியஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழுகின்ற இந்திய வம்சாவழி மக்கள் அந்தந்த நாடுகளின் அரசாங்களுடன் நெருக்கமாக இருக்குமளவுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவிலிருந்து வருகை தந்து வாழும் இந்திய வம்சாவழி மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. அவர்களின் குடியுரிமைகள் கூட முழுமையாக்கப்பட்டிருக்கவில்லை.

இந்திய வம்சாவழி மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதாக இருந்தால் அவர்களின் குடியுரிமைப் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்பட வேண்டும்.

அதேவேiளு, இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில், அவர்களுக்கு இலகுவாக கடல் கடந்த இந்திய குடியுரிமை அந்தஸ்தை வழங்குவதற்கான இலகுபடுத்தல்களை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.

அந்த வகையில் ஆறு தலைமுறையினருக்கான அந்தஸ்கை அங்கீகரிக்கும் முடிவொன்றை இந்திய துணை ஜனாதிபதி வெளியிட்டிருக்கின்றார். அதற்கு எமது வரவேற்பையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் இந்திய தூதரகத்தில் செயற்படும், இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை என்ற நிறுவனத்தின், நோக்கங்களை விரிவு படுத்தி, மலையக கல்வி வளர்ச்சிக்கான அனைத்து உதவிகளையும், இந்த இந்நிறுவனத்தின் ஊடாக செய்ய வேண்டும் என்றும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்காக,வீடமைப்பு,பாடசாலை கல்வி,புலமை பரிசில்கள், பாடசாலை பௌதிக வளங்கள், பல்கலைக்கழக வளாக ஸ்தாபிதம், இந்தியாவின் நவோதயா பாடசாலை திட்டத்தின் அடிப்படையில் ஆங்கில மொழி மூல சர்வதேச இந்து பாடசாலை, ஆசிரியர் பயிற்சி கலாசாலை,தாதியர் பயிற்சி கலாசாலை,தொழில்-நுட்ப பயிற்சி கலாசாலை, ஆகிய பல்நோக்கு விடயங்களையும் இந்தியா தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.” என்றார்.

Related Articles

Latest Articles