தாயகம் திரும்பினார் இந்திய துணை ஜனாதிபதி!

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இன்று (20) பிற்பகல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தனது விஜயத்தை நிறைவு செய்த இந்தியத் துணை ஜனாதிபதி, இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.

இந்திய துணை ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததோடு, இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டார்.

இந்தியக் துணை ஜனாதிபதி கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்ததுடன், தனது இரண்டு நாள் விஜயத்தின் போது முக்கியமான பல கலந்துரையாடல்களிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்றார். இந்தியக் துணை ஜனாதிபதி, நேற்று (19) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கையில் வசிக்கும் இந்திய சமூகத்தினரைச் சந்தித்த இந்தியத் துணை ஜனாதிபதி, பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் மற்றும் ஹூணுபிட்டி கங்காராம விகாரை ஆகியவற்றிற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் இரண்டாம் நாளான இன்று, இந்தியக் துணை ஜனாதிபதி நுவரெலியா பகுதியில் இந்திய உதவியின் கீழ் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டங்களை பார்வையிட்டதுடன், அங்கு மலையக மக்களையும் சந்தித்தார்.

நுவரெலியா சீதா அம்மன் கோவிலில் வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர், இந்தியத் துணை ஜனாதிபதி, சி.பி.இராதாகிருஷ்ணன் தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

Related Articles

Latest Articles