இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ மற்றும் ‘நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025’ ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க குறித்த அறிக்கைகளை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஜனாதிபதியிடம் வழங்கினார்.
2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-
பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மை: கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட கொள்கை ரீதியான மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புகளின் பலனாக, 2025ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் அடைந்த முன்னேற்றம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
சவால்களை எதிர்கொள்ளும் திறன்: உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகள், வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் 2025 பிற்பகுதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும், உள்நாட்டுப் பொருளாதாரம் தனது தாங்கும் திறனை வெளிப்படுத்தியுள்ளது.
முதலீட்டு நம்பிக்கை: பொருளாதாரக் கொள்கைகளில் காணப்பட்ட ஸ்திரத்தன்மை காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இது எதிர்கால அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்கான சுய பாதுகாப்பைக் கட்டியெழுப்ப வழிவகுத்துள்ளது.
இந்நிகழ்வில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் இந்த 2025ஆம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கை ஒரு முக்கிய வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
