நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அகழ்வுப் பணிகளுக்கான நிதி விவகாரம் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
சுமார் எட்டு வார காலப்பகுதிக்கான அகழ்வுப் பணிகளுக்காகச் சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மதிப்பீட்டுத் திட்டத்துக்கு நீதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதுடன், அதற்கான நிதியையும் விடுவித்துள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு அழைத்து, அன்றைய தினமே களத்தில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதென நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அகழ்வுப் பணிகளைச் சுமுகமாகவும் திட்டமிட்டபடியும் முன்னெடுப்பது குறித்துச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
செம்மணிப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பணிகள் குறித்த தரவுகள் வருமாறு:-
* முதலாம் கட்டம்: 9 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
* இரண்டாம் கட்டம்: 45 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
* மொத்த நாட்கள்: இதுவரை 54 நாள்கள் அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது.
* கண்டெடுக்கப்பட்டவை: தடயவியல் அகழ்வாய்வுத் தளங்கள் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து இதுவரை 240 மனித என்புத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
* மீட்பு: அடையாளப்படுத்தப்பட்டவற்றில் 239 மனித என்புத் தொகுதிகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வின் மூலம் மேலதிக உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
